TNPSC தேர்வில் வெற்றி பெற வழிகள்

TNPSC தேர்வு எழுதும் தேர்வாளர்கள் இதுநாள் வரையில் தேர்வில் கேட்கக்கூடிய மாதிரி வினா-விடைகளை படித்து அறிந்திருப்பீர்கள். தேர்வில் கலந்து கொள்வதற்கு முன்பாக தேர்வு குறித்து சில குறிப்புகளை கவனத்தில் கொள்வது முக்கியமானது

பொதுத்தமிழ்

பகுதி அ பாடப்பிரிவில் (இலக்கணம்): எதுகை, மோனை, இலக்கண குறிப்பறிதல், பிழை திருத்தம், தொடரும் தொடர்பு அறிதல், பெயர்ச்சொல்லின் வகையறிதல் ஆகிய பகுதிகளுக்கான இலக்கண விதிகளை நன்கு நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

பகுதி ஆ (தமிழ் இலக்கியம்): பாடப்பிரிவில் திருக்குறள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், சிற்றிலக்கியங்கள், இலக்கிய மேற்கோள்கள், சமய முன்னோடிகள் தொடர்பான பகுதிகளில் நன்கு கவனம் செலுத்த வேண்டும்.

பகுதி இ (தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும்): பாடப்பிரிவில் தமிழ் அறிஞர்களின் புனைப்பெயர்கள், இயற்றிய நூல்கள், விருது பெற்ற நூல்கள், அடைமொழிகள், அறிஞர்கள் தொடர்பான செய்திகள் குறித்த நன்கு அறிந்திருக்க வேண்டும்.

பொதுத்தமிழ் பகுதியில் அதிக மதிப்பெண் பெறுவது வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தும்

பொது அறிவு

பொது அறிவு வினாக்களை பொறுத்தவரை திறனறி மற்றும் அறிவுக்கூர்மை தவிர அரசியலமைப்பு, வரலாறு, புவியியல், தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக இயக்கங்கள், தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம், அறிவியல் என அனைத்து பாடப்பிரிவுகளையும் மீளப்பார்வை செய்ய வேண்டும்.

அறிவுக்கூர்மை மற்றும் திறனறிவுத் தொடர்பான பாடங்களில் அறிவுக்கூர்மை தொடர்பான சூத்திரங்கள் மற்றும் முறைகளை நன்கு நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் பாடங்களில், முக்கிய தினங்கள், ஆண்டு, விருதுகள், முக்கிய நூல்கள், முக்கிய நபர்கள், சர்வதேச மாநாடுகள், செய்திகளில் பேசப்பட்ட இடங்கள், மத்திய மற்றும் மாநில அரசின் நலத்திட்டங்கள் ஆகியவற்றிற்கதன குறிப்புகளை தேர்வர்கள் மீள்பார்வை செய்துகொள்ள வேண்டும்.

அரசியல் அறிவியல் பாடத்தினை பொறுத்தவரை முக்கியமான சரத்துக்கள், சட்டத்திருத்தங்கள், அட்டவனைகள் மற்றும் பகுதிகள் ஆகியவற்றை நினைவுகூர்வது அவசியமாகும்.

புவியியல் பாடத்தை பொறுத்தவரை மலைத்தெடர்கள், ஆறுகள், காலநிலை, உலோகத்தாதுக்கள் கிடைக்கும் இடங்கள், காடுகள், நீர்தேக்கங்கள் இவை தொடர்பான குறிப்புகளை படித்துக் கொள்ள வேண்டும்.

பொருளாதார பாடப்பிரிவில் திட்ட காலங்கள் மற்றும் அத்திட்டத்திற்கான மையக்கரு, நலத்திட்டங்கள், அவை நடைமுறைபடுத்தப்பட்ட ஆண்டு மற்றும் அத்திட்டங்கள் யாருடைய ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்டது என்பதையும், முக்கிய பெருளாதார கோட்பாடுகளையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். மேலும் மக்கள்தொகை கணக்கெடுப்பு (2011) பற்றிய குறிப்புகளையும் நினைவில் கொள்வது அவசியம்.

மேலும் தமிழகம் தொடர்பாக வரலாறு, புவிவியல், இலக்கியம், திட்டங்கள் மற்றும் நடப்புக்கால நிகழ்வுகள் குறித்து விரிவாக மீள்பார்வை செய்யவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் மக்கள் நலத்திட்டங்களை நன்கு மீள்பார்வை செய்ய வேண்டும்.

பாடப்புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ள திருக்குறளை நன்கு மீள்பார்வை செய்க.

TNPSCX அசல் வினாத்தாள்

முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற TNPSC தேர்வு வினாத்தாள்களை பயிற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்வது மொழிப்பாடங்களுக்கு மிகுந்த பயனையும் பொது அறிவிற்கு கேட்கப்படும் வினாக்களின் தன்மையையும் அறிய உதவும்.


தேர்வு நாளன்று . . .

முன்னதாகவே தேர்வு மையத்தில் இருக்க வேண்டும்

வினாத்தாளினை பெற்றவுடன், வினாத்தாளின் பக்கங்கள் மற்றும் கேள்வி எண்கள் சரியாக உள்ளதா என்பதை சோதித்துக் கொள்ளவும், ஏனெனில் ஏதேனும் குறைபாடு இருப்பின் உடனே அறை மேற்பார்வையாளரிடம் தெரிவித்து வேறு வினாத்தாளினை பெற இயலும். வினாத்தாளில் உள்ள வரிசை எண்ணை விடைத்தாளில் அளிக்கப்பட்டுள்ள தகுந்த இடத்தில் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

விடைத்தாளினை பூர்த்தி செய்தபின், உங்களுக்கு நன்றாக விடை தெரிந்த வினாக்களுக்கு விடையளிக்க தொடங்கலாம். உதாரணமாக பொதுத்தமிழ் பாடப்பிரிவில் சிறந்தவராக இருந்தால் பொதுத்தமிழ் கேள்விகளுக்கு முதலில் விடையளிக்க தொடங்கலாம் அல்லது அறிவுக்கூர்மை மற்றும் திறனறிதழில் சிறப்பானவராக இருந்தால் அந்த வினாக்களில் இருந்து பதிலளிக்க தொடங்கலாம்.

வினாவிற்கு அளிக்கப்பட்ட அனைத்து கொள்குறி உத்தேச விடைகளை படித்த பி;ன்பு இறுதியான சரியான விடையை தேர்ந்தெடுக்க வேண்டும்.

வினாக்களைப் படித்து வினாவிற்கு விடை தெரியுமாயின் விடைத்தாளில் விடையினை குறிக்கும் பொழுது மீண்டும் ஒரு முறை வினா எண்ணும், விடைத்தாளில் உள்ள வரிசை எண்ணும் ஒன்றாக உள்ளதா என்பதை அறிந்து பின்னர் குறிக்க வேண்டும்.

குழப்பமான வினாக்களுக்கு உடனே பதில் அளிக்காமல் அடுத்த வினாவிற்கு பதில் அளிக்க முயற்சி செய்ய வேண்டும். ஏனெனில் முந்தைய குழப்பமான வினாவிற்கான விடை பின்பு வரும் கேள்விகளை படிக்கும் பொழுது உங்கள் நினைவிற்கு வர வாய்ப்புள்ளது.

வினாவினை படித்து வினாவிற்கான விடையை உடனே விடைத்தாளில் குறித்து விட வேண்டும். கடைசியாக குறிக்கும் பழக்கம் ஆபத்தானது. ஏனெனில் விடைத்தாளில் விடையினை குறிப்பதற்கு போதுமான கால அவகாசம் இறுதியில் இல்லாமல் போய்விடும்.

கேள்விகள் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் கேட்கப்படும். தமிழ் வழியில் வினாவினை படித்து விடையளிக்கும் தேர்வாளர்கள் தமிழ் வழி வழிக் கேள்வியில் ஏதேனும் சந்தேகமோ அல்லது பிழையாக இருப்பதாக உணர்ந்தால் ஆங்கில வழி கேள்விகளை படித்து பின்பு விடையளிக்க வேண்டும். ஏனெனில் ஆங்கில வழியில் கேட்கப்பட்டுள்ள கேள்வி பதிலே இறுதியானது.

தேர்வில் வெற்றி தோல்விக்கான இடைவெளி மிகக்குறைவாக உள்ளபொழுது மேற்குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை சரியாக உபயோகித்து தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!



இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்